சென்னை: சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதியின் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர். இந்த நிலையில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குளிர் நிலவி வருவதால், மழை வர வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.  ஆனால், வானிலை ஆய்வு மையமோ, குளிர் நிலவினாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக, ஜனவரி 12ந்தேதி வரை  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில்  இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியது.

இந்த நிலையில், இன்று அதி காலை முதலே சென்னையில் பரவலாக மழை கொட்டி வருகிறது.  பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சற்று கனமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சென்னை மாதவரம், கோயம்பேடு,   கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், சென்ட்ரல், அடையாறு, திருவான்மியூர், தாம்பர8ம்  உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ரத்தினமங்கலம், மேலகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிருந்து வருகிறது.

இந்த நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் என்றும்,  வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி பகுதிகளிலும் மழை  தொடரும் என்று அறிவித்துள்ளது.