சென்னை:  சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்பட   13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.  முன்னதாக அரப்பிடக்கடல் மற்றும் வங்கக்கடலில் மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், அது வலுவிலந்து கரையை கடந்தது. இந்த நிலையில்,   இலங்கை மற்றும் அதனையொட்டிய குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே சென்னையில் மழை கொட்டி வருகிறது. செங்குன்றம், மாதவரம், மூலம்க்கடை, பெரம்பூர், அடையாறு, மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  மேலும், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.