சென்னை:

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை மாடி ரயில்சேவை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் இருளடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.

இதன் காரணமாக, எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்கள் இரவு நேரங்களில் சமூக விரோத செயல் களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை வலுத்தப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மாடி ரயில் திட்டம் தொடங்கப்பட்டபோது, கீழே உள்ள பகுதிகள் மற்றும் மாடிப் பகுதிகள் கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்படும் வகையில் வணிக நோக்கில் கட்டப்பட்டும் என தெரிவிக்கப்பட்டது. “ரயில்வே அல்லாத பயணிகள் இந்த ஷாப்பிங் வளாகங் களையும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால், அதை அதிகாரிகள் திறமையான கையாள தெரியாத நிலையில், இன்று அனைத்து ரயில் நிலையங்களும் வெறிச் சோடி பயன்பாடின்றி காணப்படுகின்றன.

பல ரயில்நிலையங்கள் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரயில் நிலையங்கள் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுபோன்ற தவறுகளை களைய ரயில்வே காவல்துறை,  ஒப்பந்தக்காரர்கள், பயணிகள் மற்றும் ரயில்வே சட்ட மற்றும் வணிக கிளைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை, ரயில் நிலையங்கள் வணிக நிறுவனங்கள், ஏடிஎம் போன்ற சேவைகளுக்கு கொடுக்கப்பட்டால் ரயில்வேக்கு வருமானமும், பயணிகளுக்கு வசதியும் கிட்டும் என்று  சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நான்கு பாதுகாப்பு காவலர்களை நியமிக்க  ரயில்வே திட்டமிட்டுள்ளது. நிலையங்கள் பாதுகாக்கப்பட்டவுடன், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நிலைய இடத்தை குத்தகைக்கு விட ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்தை அணுக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர் என்கிறார். அதே நேரத்தில் திருமலை இடத்தில் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  சென்னை பிரதேச ரயில்வே மேலாளர் (டி.ஆர்.எம்) பி மகேஷ், தனது தலைமையிலான அதிகாரிகள் குழு  கடந்த சில மாதங்களாக ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.