மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், மலை குகைகளை காணவும் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் மற்றும் நீலகிரி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதி இரவு கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ போன்ற மலை ரயில் பாதை அமைந்துள்ள வனப்பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் ஆடர்லி ஹில்கிரோ ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு, மலை ரயில் பாதையில் விழுந்து தண்டவாளம் சேதமானது.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டுச் சென்ற மலை ரயில் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ராட்சத பாறையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியாததால் மலை ரயில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இதனையடுத்து 150 சுற்றுலா பயணிகளுடன் சென்ற மலை ரயில் கல்லார் வரை பயணிகளுடன் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அரசுப்பேருந்து மூலம் குன்னூர் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து 2 நாட்களாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.