சென்னை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவரான சேலம் இளங்கோவன் இல்லம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர் சோதனை இட்டு வருகின்றனர்.

சேலம் இளங்கோவன் அதிமுகவில் பிரபலமாக இல்லை எனக் கூறப்பட்டாலும் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என அனைவருக்கும் நெருக்கமானவர் ஆவார்.   இவர் ஜெயலைதா மற்றும் அமைச்சர்களின் கணக்குகளை கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது.  இவருக்கு ஜெயலலிதா கூட்டுறவு வங்கியில் அளித்த உயர் பதவியின் மூலம் இவர் அதிகார மையமாக மாறியதாகச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தவரை இவர் அமைச்சர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவராக மாறியதாக கூறப்படுகிறது.  பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கூட்டுறவு வங்கிகள் மூலம் செல்லாதது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களைப் பெருமளவில் மாற்ற அரசியல்வாதிகளுக்கு இளங்கோவன் உதவியதாகப் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று சேலம் இளங்கோவனின் வீடு, தொழில் நிறுவனங்கள் என 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் எனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.   இவர் பணமதிப்பிழப்பு நேரத்தில் ரூ.400 கோடி ரூபாயை மாற்றி உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.