மயிலாடுதுறை:  பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக குமரிமுதல் காஷ்மீரை ராகுல் பாதயாத்திரை மேற்கொள்கிறார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் விழாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில்   முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் பங்கேற்றார். முன்னதாக,  மயிலாடுதுறையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  அவர் கூறியதாவது, “ஊழலை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், கடந்த தேர்தலில் 36,000 கோடி ரூபாய்  செலவு செய்து பாஜக வெற்றி பெற்று,  நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 36 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? இது ஊழல் செய்த பணம் என்று குற்றம் சாட்டிவர், காங்கிரஸ் கூட்டணி பிளவு பட்டுள்ளதால் 35 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள மத்திய அரசு இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.  நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டு நாட்டை ஒருங்கிணைத்தவர் ஜவஹர்லால் நேரு அதையெல்லாம் மறைத்து மோடி நாடகமாடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,   இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும் என்று உறுதி தெரிவித்தவர், தற்போது காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்பது உண்மைதான். அதை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார், இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து தலைவர்கள் வெளியேறி வருகிறார்களே என்ற கேள்விக்கு,  கட்சியில் இருந்து சில தலைவர்கள் வெளியேறுவதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. என்னைப் போன்ற பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றார்.

5ஜி அலைக்கற்றை குறித்த கேள்விக்கு,  5ஜி அலைக்கற்றை ஊழலில் சென்று கொண்டிருக்கிறது, ஊழல் இதுவரை வெளிவரவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு,  2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

150 நாட்கள் நடைபெறும் ‘பாரத் ஜோடா பாத யாத்திரை’ குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை…