இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை துவங்க உள்ள நிலையில் இதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சஷிதரூர் எம்.பி. ஆகியோர் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தியை வலியுறுத்தப்போவதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தியுடன் விவாதிப்பதற்காக அசோக் கெலாட் இன்று அல்லது நாளை கேரளா செல்வார் என்று முன்னதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், செப்டம்பர் 23 ம் தேதி ஒருநாள் நடைப்பயணத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராகுல் காந்தி டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவர் தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள ராகுல் காந்தி இந்த ஆலோசனைக்குப் பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது.