வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதி மக்களுக்கு 50,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளையும், உணவு பொட்டளங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களையும் தனது எம்.பி அலுவலகம் மூலமாக அனுப்பியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தொகுதியை ராகுல் காந்தி பார்வையிட்டிருந்தார். அப்போது, அத்தொகுதியில் உள்ள மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு உதவிகளை தாம் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, பெட் ஷீட்கள் உட்பட இதர அத்தியாவசிய தேவை பொருட்களை முதற்கட்டமாக ராகுல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மூலமாக அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக 10,000 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை ராகுல் அனுப்பியுள்ளார். ஒரு குடும்பத்திற்கென கொடுக்கப்படும் பொருட்கள் நிறைந்த பையில், 5 கிலோ எடை கொண்ட அரிசியும், இதர அத்தியாவசிய பொருட்களும் உள்ளன. இதை பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளால், அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக வழங்கப்பட உள்ள பொருட்களில், சுத்தம் செய்யும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதேநேரம், மாத இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தொகுதி மக்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.