டில்லி

ணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மாநிலத்தில் உள்ள குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். எனவே மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார்.  ஆயினும் அங்கு வன்முறை ஓயவில்லை. மணிப்பூர் நிலவரம் தொடர்பாக வரும் ஜூன் 24ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டம் டில்லியில் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநிலக் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சித்தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க, மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்

“மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாகப் பற்றி எரிகிறது, ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக் கட்சி கூட்டம். இந்தக் கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகிறது” 

என்று தெரிவித்துள்ளார்.