பாட்னா

ன்று பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின் சரத்பவார் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது..  இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. அக்கட்சி தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அதே வேளையில் எதிர்த்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாகத் திரட்டி, சுமார் 400 தொகுதிகளில், பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த அதிரடி முயற்சி நடக்கிறது.  இமாச்சலப்பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

எனவே பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணம் உருவாகி, மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது அரசியல் அரங்கைப் பரபரப்பாக்கி உள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்.

அவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுடன் சென்று சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் இன்று கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றே தலைவர்கள் பாட்னாவுக்கு வந்து குவியத்தொடங்கினர். மாநில அரசின் விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வரான மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பாட்னா சென்றடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.