டில்லி

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகாசம் கோரியதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாகத் தீர்ப்பு வழங்கினர். பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 13-ந் தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிடக் கூடுதல் அவகாசம் தேவை என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

“நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோடி தன்னால் இயன்றவரை முயல்கிறார். 

தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், இந்தத் தகவலைத் தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று ஸ்டேட் வங்கி . ஏன் விரும்புகிறது? 

ஒரே சொடுக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கேட்டால் பருப்புகளில் கருப்பு எதுவும் இல்லை, முழு பருப்புகளும் கருப்பு என்று காட்டுகிறது. 

நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் ‘மோதானி குடும்பமாக’ மாறி தங்கள் ஊழலை மறைக்க முயல்கின்றன. 

தேர்தலுக்கு முன் மோடியின் உண்மையான முகத்தை மறைக்க இதுவே கடைசி முயற்சி” 

என்று பதிவிட்டுள்ளார்.