மத்திய அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக “உறக்கத்தில் இருக்கும் மோடி அரசு விரைந்து முடிவெடுக்காவிட்டால், ஒத்துழையாமை இயக்கம்” நடத்தப்படும் என மத்திய செயலக சேவை சங்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெறுவதால் பல ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் நிதி இழப்பு ஏற்படுவதை அடுத்து மனஉளைச்சலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய செயலக சேவை (CSS) அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் நேற்று (மார்ச் 4|), பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை மற்றும் பாதுகாப்பு போன்ற பல அமைச்சகங்கள் அமைந்துள்ள ரைசினா ஹில்ஸ் பகுதியில் பேரணி நடத்தினர்.

இந்திய அரசின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள திட்டங்களைக் கருத்தில் கொண்டு, CSS அதிகாரிகளின் பணியை சுமுகமாக மேற்கொள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அதிகரித்து வரும் மனிதவளத்திற்கான தேவையை மதிப்பிடுவதற்கும், நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும், அக்டோபர் 27, 2022 அன்று மத்திய அரசு ஒரு பணியாளர் பதவி மறுஆய்வுக் குழுவை அமைத்தது.

CSSக்கான நிர்வாக அமைச்சகமான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) அதிகாரிகளால் 2022 இல் அமைக்கப்பட்ட இந்த பதவி மறுஆய்வுக் குழு (CRC) இன்னும் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

“இதுகுறித்து CSS சங்கம் பல்வேறு மட்டத்தில் தொடர்ந்து புகார் அளித்தபோதும் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் எந்த நேர்மறையான முடிவையும் பெறவில்லை.

மத்திய அரசின் முதுகெலும்பாகக் கருதப்படும் சிஎஸ்எஸ் அதிகாரிகளிடம் இப்படி நடந்துகொள்வது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது,” என்று DoPT செயலாளருக்கு சங்கம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறைந்தது 20 அரசுத் துறைகளில் 2,500க்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. மற்ற அனைத்து துறைகளின் தரவுகளை கணக்கிடும் போது இதன் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சிஆர்சி அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காரணமாக, இந்த துறைகள் பணியாளர் பற்றாக்குறையால் முடங்கி வருகின்றன, இது அதிகாரிகளின் பணிக்கு இடையூறாக உள்ளது. கிட்டத்தட்ட CSS இன் ஒவ்வொரு நிலையிலும் தேக்கநிலை உள்ளது, இதன் காரணமாக அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்,” என்று CSS சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த சில நாட்களில் தொடர் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும், பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கவுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தவிர, காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே வேலை செய்யப்போவதாகவும் தற்போது வழக்கமாக கூடுதல் நேரம் வேலை செய்து வரும் நிலையில் இனி அதை மேற்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்… பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..