டில்லி

தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் தொடர்ன்ந்து கொலைகள் நடப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்,  இதைக் கண்டித்து பண்டிட்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,

”கடந்த 5 மாதங்களில் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 15 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்ற செவ்வாய்கிழமையன்றும் ஒரு ஆசிரியை கொல்லப்பட்டார்.

இவ்வாறு காஷ்மீர் பண்டிட்கள் 18 நாளாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக 8 ஆண்டு ஆட்சியைக் கொண்டாடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. பாரதப் பிரதமர் அவர்களே, இந்நிகழ்வு திரைப்படமல்ல.  இதுதான் காஷ்மீரின் இன்றைய உண்மை நிலை’’

என்று பதிந்துள்ளார்.