அயோத்தி

அயோத்தி ராமர் கோயிலில் கருவறை அமைக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார்

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துத் தீர்ப்பு வெளியிட்டது.  அந்த  தீர்ப்புக்குப் பிறகு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குக் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  தற்போது கோயில் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

நேற்று, இரண்டாவது கட்டமாகக் கோயிலின் கருவறை அமைக்கும் பணிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார்.  இதற்காக வேத மந்திரங்கள் முழங்கப் பூஜைகள் நடத்தப்பட்டன.   நிகழ்ச்சியில், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, துறவிகள், மடாதிபதிகள், ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ”மக்களின் நம்பிக்கைக்கு  ஓர் அடையாளமாக ராமர் கோயில் விளங்கும்.  நாட்டின் தேசிய கோயிலாக இருக்கும் இந்த கோயில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கடந்த 500 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு இருந்த சங்கடம் முடிவுக்கு வந்து விரைவில் இங்கு ராமர் கோயில் அமையும்’’ என்று கூறினார்.

இது குறித்து துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அயோத்தி ராமர் கோயில் முதல் கட்ட பணிகள் முடிந்து விட்டன.  இரண்டாம் கட்ட பணிகளுக்காகக் கருவறைக்கு அடிக்கல் நாட்டிய நிலையில்  2023 டிசம்பருக்குள் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்து ராமர் சிலை கருவறைக்குள் நிறுவப்படும். அதன் பின்னர், தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.