உலக கோப்பை டி 20 போட்டிகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க ராகுல் டிராவிடிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அந்த பதவிக்கு ராகுல் டிராவிடை நியமிக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே ஒரு முறை பதவி நீட்டிப்பு பெற்ற ரவி சாஸ்திரி இம்முறை வயது அடிப்படையில் பதவி நீட்டிப்பு பெறும் தகுதியை இழந்ததால், வேறு நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

ராகுல் டிராவிட் இதற்கு இசைவு தெரிவித்திருப்பதாகவும், அவரிடம் இருந்து முறையான விண்ணப்பம் பெறப்பட்டு இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து அணியின் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களான விக்ரம் ரத்தோர், பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலமும் முடிவடைவதால், இந்த பதவிக்கும் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.