டில்லி

நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலின் போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து ஓடியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் கடந்த 13-ஆம் தேதி திடீரென நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். அவையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனால் கடந்த வாரம் முதல் தற்போது வரை 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றன .

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி,

“நாடாளுமன்றத்துக்குள் சில இளைஞர்கள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களைத் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓடிவிட்டனர். ஆனால் நாங்கள் இதை எதிர்கொண்டோம்.என்பது ஊடகங்களில் ஒளிபரப்பப் படவில்லை. 

இந்த மக்களவை பாதுகாப்பு மீறல் குறித்த சம்பவத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. அதேவேளையில் அவர்கள் ஏன் இந்த வழியில் எதிர்ப்பு தெரிவித்தனர்?  நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் இதற்குப் பதில் ஆகும். ஊடகங்கள் எதுவும் நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டம் பற்றிப் பேசவில்லை. 

மாற்றாக, இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, நான் பதிவு செய்த வீடியோவைப் பற்றி பேசுகிறார்கள்” 

என்று உரையாற்றி உள்ளார்