திருவனந்தபுரம்

ஒரே நாளில் கேரளாவில் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்தது.  மேலும் கொரோனா வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது.

டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலம், இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பருவமாகவே மாறி விட்டது. நடப்பு ஆண்டு நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. தற்போது கொரோனாவின் மற்றொரு திரிபான ஒமைக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனாவின் இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய்த் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பில் 80 சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,606 ஆக அதிகரித்துள்ளது.  இதில் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டில்லியை அடுத்த நொய்டாவில் பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நொய்டாவில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன, மக்கள் அடர்த்தி மிகுந்த நொய்டாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.