திரையுலகில் எண்ணற்ற நடிகர், நடிகைகள் அறிமுகமாகின்றனர் அவர்களில் மக்கள் மனதில் ஹீரோ, ஹீரோயினாக ஒரு சிலர் மட்டுமே வருடங் கள் உருண்டோடியும் நிலைத்து நிற்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’ஆபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுமாகி வரும் ஆகஸ்ட் 15 தேதியுடன் 45 வருடம் நிறைவு செய்கிறார். இன்றளவும் அவர் ஹீரோவாக தனது அந்தஸ்த்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.


ரஜினியின் 45 வருடத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா தனது 42வது ஆண்டு திரியுலக நிறைவை கொண்டாடுகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள் மழையாக பொழிந்துக் கொண்டிருக்கிறது. பாரதிராஜா இயக்கிய ’கிழக்கேபோகும் ரயில்’ படத்தில் ராதிகா பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக பரஞ்ஜோதி பாத்திரத்தில் சுதாகர் நடித்தார்.
42 வருட நிறைவு பற்றி ராதிகா சரத்குமார் கூறும் போது, ’ஒருபோதும் நான் இவ்வளவு தூரம் கடந்து வருவேன் என்று எண்ணவில்லை. ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டேன். கடுமையான உழைப்பை மட்டுமே நம்பினேன். அதுதான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. அது எனக்கு சந்தோஷத்தையும் நம்பிக்கை, தைரியத்தையும் அன்பு மற்றும் வலிமையை கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்திருக்கிறார்.