2018-ம் ஆண்டு நடந்த டப்பிங் கலைஞர்கள் சங்கத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பணி புரிந்து வந்தவர் ராதாரவி .

அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

இம்முறையும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிட்டார் . ஆனால் அவரை எதிர்த்து சின்மயி களமிறங்கினார்.

வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த சின்மயி.; “2018-ம் ஆண்டு எந்தவித விளக்கமும் இல்லாமல் என்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கினார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். உறுப்பினராக இருப்பதற்கு அத்தனை உரிமைகளும் எனக்கு இருப்பதாகத் தீர்ப்பு வழங்கினார்கள்.

சில நாட்களுக்கு முன்பு டப்பிங் யூனியன் தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலில் எனது பெயரை நீக்கியிருந்தார்கள். அதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு. இதைத் தொடர்ந்து நீதிபதியிடம் பேசி இன்றைக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தேன்.

டப்பிங் யூனியனுடைய பணத்தை வைத்தே வழக்குத் தொடர்கிறார்கள். இங்கு நடப்பது தவறுதான்” என்று பேசினார் சின்மயி.

இந்நிலையில் சின்மயி மனு நிராகரிக்கப்பட்டு, தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ராதாரவி..

தனது மனு நிராகரிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில், “ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். எனது போட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சங்கத்தில் உறுப்பினராக எனக்கு முழு உரிமை இருக்கிறது என இடைக்கால உத்தரவையும் மீறி இது நடந்திருக்கிறது. நான் உறுப்பினர் என நீதிமன்றம் சொல்லியும் நான் உறுப்பினர் இல்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி ரவி எப்படி முடிவெடுத்தார் என்பது எனக்குப் புரியவில்லை.

தேர்தல் அதிகாரி என்று ஒருவரை நியமித்ததே தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நான் டப்பிங் சங்கத்தில் உறுப்பினர் இல்லை எனத் தேர்தல் அதிகாரிகள் முடிவெடுத்தது யாருடைய உத்தரவின் அடிப்படையில்? ராதாரவியின் உத்தரவா? எப்படியோ நான் இதை சட்டரீதியாக எடுத்துச் செல்கிறேன். என்ன சொன்னாலும் செய்தாலும் ராதாரவி போட்டியிட்டுதான் நிற்க வேண்டும். ராமராஜ்யம் அணி அதற்காகத்தான் நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார் சின்மயி.