திருமலை:
திருப்பதியில் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாகத் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை வாங்காமல் சாமி கும்பிட வந்திருக்கும் பக்தர்கள் கூட்டம் காரணமாகத் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் அனைத்து அறைகளும் நிரம்பிக் காணப்படுகின்றன.

அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்திற்குக் கொளுத்தும்
வெயிலில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் இலவச தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 300 ரூபாய் தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் நிலவுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ள காரணத்தால் இன்று துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி தரிசனத்திற்காகப் பரிந்துரை கடிதங்களை வாங்க இயலாது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பங்குனி மாத பெளவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு கோவிலிலிருந்து
புறப்பட்ட வாகன மண்டபத்தை அடைந்த மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில்
எழுந்தருளினார். தொடர்ந்து மலையப்ப சுவாமிக்கு தூபதீப நெய் வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது. பின்னர் மலையப்பர் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முடக்கத்துடன் கருட சேவையைக் கண்டு ஹாரத்தி சமர்பித்து வழிபட்டனர்.