சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள புழல் ஏரி உடையும் நிலையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அங்கு இரு அமைச்சர்கள் நேரடி ஆய்வு செய்தனர். இதையடுத்து, புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள புழல் ஏரியும் நிரம்பிய நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.  ஏரியில் இருந்து   உபரி நீர் 7000 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து  தடை செய்யப்பட்டது. இதனால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே புழல் ஏரியில் இருந்து வெளியாகும் நீரால், மஞ்சகுப்பம் முதல் மணலி புதுநகர் வரை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், ஏரையின் கரை உடைந்த தகவல் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பி உள்ளது. ஏரியின் கரை உடைந்தால் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழும் என்பது புழல் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த பீதி காரணமாக, நீர்வளத் துறை அதிகாரிகள் புழல் ஏரிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிகைகளையும் எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர்.  அப்போது, ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு  விளக்கம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,  ழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 2120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும். இன்றைய (07.12.2023) காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது.  ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது.

மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது, இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.