‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.

இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ‘புஷ்பா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் புஷ்பா ராஜ் – படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திர பெயர் – அறிமுகம் என்று ஒரு டீஸரை வெளியிட்டனர். புஷ்பாவின் ஃபர்ஸ்ட் லுக் ‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் ஜானி ஒரு பாடலுக்கு நடனமைத்துள்ளார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அல்லு அர்ஜுன் மற்றும் ஜானி இணைந்த புட்டபொம்மா பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .

இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.