சென்னை: புதுக்கோட்டை  குடிநீர்த்தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது குறித்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, இந்த செயல் கடும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக  சட்டப்பேரவை உறுப்பினர்களான அதிமுக சி.விஜயபாஸ்கர், பாமக ஜி.கே. மணி உள்ளிட்டோர் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சாதிக் கொடுமையை சான்றோர்களே தவறு என்று உணரச் செய்து தனது கல்வியால் சட்டமும் கல்வியும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை அம்பேத்கர். அத்தகைய மாமேதை பிறந்த மண்ணில் சாதிய பாகுபாடு தீண்டாமை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது, கண்டிக்கத்தக்கது.

மனிதக் கழிவு கலந்த சம்பவம் நான் அறிந்தவுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும், தடையின்றி குடிநீர் கிடைக்க உறுதி செய்திடவும், தேவையான நடவடிக்கை எடுக்க நான் அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி புதுவை ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு நோய்த் தடுப்பு பணிகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, குடிநீர் குழாய்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஏற்றப்பட்ட குடிநீர் மாதிரி சேகரித்து அறந்தாங்கி சுகாதார மையத்தில் பரிசோதித்ததில் நீர் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கு ரூ.2 லட்சம் செலவில் புதிய குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டு ஜனவரி 5 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது. அத்துடன் புதிய மேல்நிலைத் தொட்டி ரூ. 7 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாரி மூலம் தினசரி காலை, மாலை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இதுவரை 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மிக கடுமையாக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.