தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் என். ரங்கசாமியும் தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்தியிருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் “தாங்கள் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தனது உடல்நிலையில் அசௌகரியம் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.