சென்னை:
சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவுக்கு பொதுமக்கள் சென்று பார்வையிட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு அரசு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 50 ஏக்கர் பரப்பினைக் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து தொல்காப்பிய பூங்கா என்ற சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கி பராமரித்து வருகிறது.


கடல்சார், ஈரப்புலன்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பின் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள ஏதுவாக தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட வாரத்தில், செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமதிக்கப் படுகின்றனர்.

தற்போது தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் கட்டணத்துடனான நடைபயிற்சி மேற்கொள்ள காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

நடைபயிற்சி மேற்கொள்ளவதற்கான விண்ணப்ப படிவத்தை தொல்காப்பியப் பூங்காவின், www.chennairivers.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பூங்கா அலுவலகத்தில் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.