டெல்லி: இந்தியாவில், இனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கைத் தொடர்ந்து, இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு அதிரடியாக தடைவிதித்தது. இதுபோன்ற செயலிகள் மூலம்  இந்தியாவின் தகவல்கள் திருடப்படுவதாகவும், அதை  பாதுகாக்கும் வகையில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. பின்னர்,  மேலும், பிரபலமான பப்ஜி என்ற  ஆன்லைன் கேம் உட்பட 118 சீன செயலிகளுக்கு செப்டம்பர் 2ந்தேதி  தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இளைஞர் சமுதாயத்தை அடிமையாக்கி வைத்திருந்த  பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் இருந்து வந்ததும், இதனால் மலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுகளை நாடியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில்,  மத்தியஅரசின் தடை பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, மொபைல் செயலிகள் தரவிறக்கம் செய்யும், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் அந்நிறுவனங்கள் அகற்றியது. இதனால், ஆன்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு , பப்ஜி கேம் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

ஆனால், ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த பயனர்கள், தொடர்ந்து பப்ஜி விளையாட்டை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களும் இன்றுமுதல் பப்ஜி விளையாட முடியாதவாறு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதை அந்த நிறுவனமும் உறுதி செய்துள்ளது.