சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

கோலிவுட்டில், பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை லட்சுமிபிரியா ஆகியோர் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளனர்.

சின்மயி : பிஎஸ்பிபி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வழக்குத் தொடர முன்வர வேண்டும் . புகார் கொடுக்க முன்வரும் பெற்றோர்கள் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளும் படியும், அவர்களுக்கு பெரும் வழக்கறிஞர்களிடம் சட்ட உதவி கிடைக்க எற்பாடு செய்வதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி : நாம் இதனை பெரிதுப்படுத்துவதன் மூலம் இது உரிய நபரை சென்றடைந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உதவும். தங்களுக்கு நடந்த கொடுமையை தைரியமாக பகிர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் எனது அன்பும், அரவணைப்பும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மி ப்ரியா : அந்த மனிதரின் வகுப்பில் படிக்கும் ஒருவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே இதனை பதிவு செய்கிறேன். அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதனை பதிவு செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.