திருவாரூர்,

திருவாரூரில் மத்திய அரசின் ஓஎன்ஜிசிக்கு எதிராக வணிகர்கள்  கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறு தோன்றும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

இதற்கு அநத பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் பகுதியில் கடைகளை அடைத்து வணிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் துரப்பன கிணறு அமைத்து வருகிறது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி கிணறு செயல்படுவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதை கண்டித்து அந்த பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அருகிலுள்ள கிராமங்களான  தண்ணாநல்லூர், மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிபந்தல், நன்னிலம் பகுதி மக்களும் போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

இன்று அந்த பகுதிகள் முழுவதும்  உள்ள  8 கிராமங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை போக்குவரத்து வாகனங்களும் இன்று இயக்கப்படவில்லை.