சென்னை,

திரைப்பட இணைதயாரிப்பாளர்   அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்பு செழியன்  தற்போது தலைமறைவாக உள்ளார். சிலர்  அவர் வெளிநாடு தப்பிவிட்டார் என்றும், ஒருசிலரோ அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அன்புசெழியன் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், அன்புச்செழியனின் கொடுமையால் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அவமதிப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர்’   ‘கந்து வட்டி வில்லனின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“திரைப்படத் தயாரிப்புக்காக கந்துவட்டிக்குக் கடன் கொடுத்த அன்புச் செழியன் என்ற கந்து வட்டிக்காரர் அவமானப்படுத்தியதால், அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அசோக்குமார் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பார்ப்பதற்கு பிரகாசமாகத் தெரியும் திரையுலகில் நடைபெறும் அதிர்ச்சிகரமான இருட்டு நிகழ்வுகளுக்கு, இது ஓர் உதாரணமாகும்.

தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த வில்லன், கந்துவட்டியும் கந்துவட்டிக்குக் கடன் தருபவர்க ளும்தான். திரையுலகில் கதாநாயகனாக இருப்பவர்கள்கூட, இந்த வில்லனிடம் கைகட்டித்தான் நின்றாக வேண்டும். இதற்கு முன், கடந்த 2003-ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஜி.வி என்ற தயாரிப்பாளர், கந்துவட்டிக்கு வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாததற்காக இழைக்கப்பட்ட அவமானங்களைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

அவரைப் போலவே, இப்போது அசோக்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட 15 ஆண்டுகளில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு தற்கொலைசெய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்கள் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை என்பதால், அதுகுறித்த விவரங்கள் வெளிவரவில்லை.

தயாரிப்பாளர்கள் ஜி.வி., அசோக்குமார் ஆகிய இருவரின் தற்கொலைகளுக்கும் மூல காரணமாக இருந்தவர், அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும், அவர்மீது எந்த நடவடிக்கை யும்  மேற்கொள்ளப்படவில்லை.

ஜி.வி தற்கொலைக்காக அவர்மீது வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அன்புச்செழியனின் கொடுமையால் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவமதிப்புக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். மதுரையில் ஒரு தயாரிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டாலும்கூட, அவருக்கு எதிரான வழக்கு வலுவிழக்கச் செய்யப்பட்டுவிட்டது.

இத்தனைக்கும் காரணம், இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் கறுப்புப்பணத்தை திரையுலகில் முதலீடு செய்து, பெரும் லாபம் ஈட்டித் தரும் பணியை அவர் செய்து வந்ததுதான் எனக் கூறப்படுகிறது.

இப்போதுகூட அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அன்புச் செழியன் மீது மிகவும் சாதாரணப் பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணம், கந்துவட்டிதான் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தெரிந்தி ருந்தாலும், அதற்குக் காரணமானவர்மீது கந்துவட்டிச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இத்தனைக்கும் காரணம், தமிழக அமைச்சராக இருக்கும் உத்தமர் ஒருவரின் தலையீடுதான் என்று கூறப்படுகிறது. தர்மயுத்தம் நடத்திய அந்த அமைச்சரின் வாரிசுமூலம் பலநூறு கோடி கறுப்புப்பணம் திரையுலகில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அப்பணத்தை அன்புச்செழியன்தான் நிர்வகித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால், அசோக்குமார் தற்கொலை வழக்கிலும் அவர்மீது நடவடிக்கை பாயாது என்றே தெரிகிறது.

அதேநேரத்தில், கசப்பான இன்னோர் உண்மையையும் கூறித்தான் ஆக வேண்டும். திரைத்துறை யினரின் சரியான திட்டமிடல் இல்லாமை, பிரபலங்களின் பின்னால் ஓடும் வழக்கம், ஓடும் குதிரைமீது பணம் கட்டும் சூதாட்ட குணம் போன்றவைதான் கந்துவட்டி எனப்படும் புதைகுழியில் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொள்வதற்கு முக்கியக் காரணமாகும்.

தமிழ்த் திரையுலகச் சந்தையில் ஒரு திரைப்படம் எவ்வளவுதான் வெற்றிகரமாக ஓடினாலும் ரூ.100 கோடி வசூல் ஈட்ட வாய்ப்பில்லை என்பது நன்றாகத் தெரிந்தும், கதையை நம்பாமல், கதாநாயகனை மட்டும் நம்பி ரூ.200 கோடி, ரூ.300 கோடிக்குப் படம் எடுப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமாக இருக்கும். இது விளக்கைத் தேடி விழுந்து அழியும் விட்டில் பூச்சியின் செயலுக்கு இணையானதுதானே.

சமீப காலங்களில், மிகப்பெரிய முதலீட்டில் திரைப்படம் தயாரித்து, அது தோல்வியடைந்ததால், வாழ்நாள் முழுவதும் ஈட்டியதையெல்லாம் இழந்து, கடன் என்ற கடலில் தத்தளித்துக்கொண்டி ருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களை நான் அறிவேன்.

தமிழ்த் திரையுலகில், கடந்த சில ஆண்டுகளில் கதையை நம்பி ஓரிரு கோடி ரூபாய் முதலீட்டில், முகம் தெரியாத கலைஞர்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட ஏராளமான திரைப்படங்கள், பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளன. திரைத்துறை என்பது ஒரு சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் முடிந்துவிடுவதில்லை.

அத்துறையை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர்களின் நலனுக்காக திரைத்துறை உயிர்ப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும். அதற்காக, அத்துறையை சூதாட்டமாகக் கருதாமல், தொழிலாகவும் வணிகமாகவும் நடத்த வேண்டும்.

திரைத்துறை தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு வங்கிக் கடன் வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. திரைப்படம் தயாரிக்க வங்கிகள் விதிக்கும் நிபந்தனைகளில் மிகவும் முக்கிய மானது, படத்தயாரிப்பு செலவுகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதுதான். ஆனால், துரதிருஷ்ட வசமாகப் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வங்கிக்கடன் பெற முயலாமல், கந்துவட்டிக்குக் கடன் வாங்கிக் கண்ணீரில் மிதக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி, திரைத்துறையினர் தங்களுக்குள் விவாதித்து திரைப்படத் தயாரிப்புச் செலவைக் குறைத்தல், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கை களின்மூலம் தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைதுசெய்து, கடும் தண்டனை பெற்றுத்தரவும் அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.