வாரணாசி:
2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா பேட்டி ஒன்றில், பிரியங்கா காந்தி மக்களவையில் நிச்சயம் இருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதிகளும் பிரியங்கா காந்திக்கு உண்டு. அவர் நாடாளுமன்றத்தில் நன்றாக செயல்படுவார். அங்கு இருப்பதற்கு அவர் தகுதியானவர். காங்கிரஸ் கட்சி அவரை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, பிரியங்கா காந்தி 2024 மக்களவை தேர்தலில் அறிமுகமாகலாம் என்று ஊகங்கள் கிளம்பியது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் கூறுகையில், பிரியங்கா காந்திக்கு வெற்றி பெறவும், கட்சியை வெற்றி பெறச் செய்யும் ஆற்றலும் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் முடிவு அவர் கையிலும் கட்சி தலைமையிடமும் உள்ளது என்று தெரிவித்தார்.

சிவ சேனா (யு.பி.டி.) மூத்த தலைர் சஞ்சய் ரவுத் கூறுகையில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார். வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை விரும்புகிறார்கள். ரேபரேலி, வாரணாசி மற்றும் அமேதி ஆகிய இடங்களுக்கான போட்டி பா.ஜ.க.வுக்கு கடினமானது. மக்கள் ராகுல் காந்தியுடன் நிற்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாரணாசியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட்டால், அவர் (பிரியங்கா காந்தி) நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார் எனபது எனது கருத்து என்று தெரிவித்தார்.