வாஷிங்டன்

பொதுத்துறை வங்கிகளை இந்திய அரசு தனியார் மயமாக்குவது மிகவும் தவறான செயல் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை காப்பீடு நிறுவனம் உள்ளிட்டவற்றை தனியார் மயம் ஆக்க உள்ளதாக தெரிவித்தார்.   மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

அந்த போராட்டங்களின் ஒரு பகுதிகளாக வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் இரு தினங்கள் வேலை நிறுத்த்ததில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த வேலை நிறுத்தத்தில் நாடெங்கும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் 1.80 லட்சம் கிளைகள் இயங்கவில்லை.   வங்கி ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் “பொதுத் துறை வங்கிகளை தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மாபெரும் தவறு என நான் கருதுகின்றேன்.   அதுவும் நாட்டின் குறிப்பிட்ட அளவிலான வங்கிகளை வெளிநாட்டு வங்கிகளுக்கு விற்பது அரசியல் ரீதியாகவும் சிறிதும் எளிதானதில்லை.

இந்த வருட அதாவது 2021 – 22 பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இரு பொதுத்துறை வங்கிகளின் தனியார் மயமாக்கல் குறித்து குறைந்த விவரங்களே உள்ளன.  அதே வேளையில் இந்திய தனியார் வங்கிகளில் ஒன்று பொதுத் துறை வங்கியை கையகப்படுத்தும் நிலையும் இருக்கலாம். ஆயினும்அவற்றுக்கு அந்த ஆர்வம் உண்டா என்பது தெரியவில்லை.

சென்ற ஆகஸ்ட் 2016-ல் அறிவிக்கப்பட்டு செயலில் உள்ள இடைக்கால பணவீக்க இலக்கு வரும் மார்ச் 31 உடன் முடிவடைகிறது. இதற்கு அடுத்தாக மேலும் 5 ஆண்டுகளுக்கான பணவீக்க இலக்கு விரைவில் அறிவிக்க உள்ளனர். இப்படி இருக்க நிதி கொள்கையின் கட்டமைப்பில் பெரியளவில் மாற்றங்கள் செய்தற்கு இது சரியான நேரமில்லை . இதனால் கடன் பத்திர சந்தை பாதிப்பு அடையும்” என தெரிவித்துள்ளார்.