சென்னை:  தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த பேருந்துகளை இயக்கலாம் என தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 1ந்தேதி முதல், மாவட்டங்களுக்குள்ளே தனியார் மற்றும் அரசு பேருந்துக்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், ,மாவட்டங்களுக்கு இடையேயான பொது பேருந்து போக்கு வரத்திற்கு அனுமதியில்லை. அதற்கான தடை தொடர்கிறது என்றும்  தமிழகஅரசு அறிவித்தது.

இதையடுத்து,  தனியாா் பேருந்து உரிமையாளா்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூறிய பேருந்து உரிமையாளர்கள்,  ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு, தமிழகம் முழு வதும் சுமாா் 5ஆயிரம் தனியார் பேருந்துகள் இயங்கி வந்ததாகவும், கடந்த ஜூன் மாதம் அளிக்கப் பட்ட தளர்வின்போது, 4000 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், மாவட்டத்துக்கு வெளியே பேருந்துகளை இயக்க அனுமதியில்லை என்றால், நாங்கள் பஸ்களை இயக்குவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும், இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில்  தனியார் பேருந்துகள் நாளை இயக்கப்படாது  என்று கூறியதுடன், தமிழகஅரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக,  பேருந்துகளை மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது. மேலும், பேருந்தின் அனைத்து இருக்கைகளும்  பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் என்று வலியுறுத்தி உள்ளனர்.