சென்னை

சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கைதி ஒருவர் பிளேடால் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு பிளேடை விழுங்கி உள்ளார்.

மீனம்பாக்கம் காவல்நிலையத்தின் வழக்கு ஒன்று சென்னை ஆலந்தூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்தது.  இதில் பழைய குற்றவாளியான ஜான்பால் எனப்படும் கருப்பு என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவரை இன்று வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட கருப்பு நீதிமன்றத்தில் திடீரென பிளேடால் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு பிளேடையும் வாயில் போட்டு விழுங்கி விட்டார்.    பிறகு அவர் வாயில் ரத்தம் சொட்ட மயங்கி விழுந்து விட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

அவரை காவல்துறையினர் ரத்தம் சொட்டச் சொட்ட ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   சிறையில் இருந்து வந்த கைதியிடம் பிளேட் எவ்வாறு வந்தது என்பது மக்களுக்கு வியப்பை உண்டாக்கி இருக்கிறது.  இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.