சென்னை: மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்  என்றும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்ககை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணையை மேற்கொண்ட இலங்கை  ஊர்க்காவல்துறை நீதிமன்றம், கைது செய்யப்பட்ட 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து,  ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். மீனவர்களின் போராட்டத்தினால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகுள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. இதனால், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
மேலும், தொடர்ந்து எல்லை தாண்டியதாக மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதியானது மற்றும் விபரீதமானது. இதை நிலை தொடர்ந்தால், தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசிய மயமாக்குவதும், மீனவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பை அபகரிப்பதாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையீட வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன்.

தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் படகுகுள் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் நலனை காக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இலங்கை சிறையில் உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருக்குரிய இந்தியர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.