சென்னை: பிரதமர் அப்பட்டமாக பொய் சொல்கிறார்,  தமிழ்நாட்டுக்கு பிரதமர் வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என  முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை முறையாக சென்றடைகிறதா என்பதை அறியும் நோக்கில் நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பயனர்களிடையே உரையாடினார். இந்த திட்டத்தின்படி, முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசியதுடன், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனமும்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது.  அவர்களுக்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாயையாவது ஒதுக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்தாரா என்று  கேள்வி எழுப்பியவர்,  “சென்னைக்கு வந்த பிரதமர் மோடி,  மாநில அரசுக்கு தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான பொய்யை சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரதமர். எந்த மக்களுக்கு நிதி கொடுத்தார் என கூறியிருந்தால் அவர்களுக்கு கிடைத்ததா என கேட்கலாம் என காட்டமாக விமர்சித்தார்.

துகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம்.

புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.

மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் என இப்படி, தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது திராவிட மாடல் அரசு.

எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டன. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால், இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை. மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணா, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன். அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், “நீங்கள் நலமா?” என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.


அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும். நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான். அதேசமயம், மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம். இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?

மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்ட மக்களுக்காக, மாநில பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு. உங்கள் ஒவ்வொருவர் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.