சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று  நீங்கள் நலமா  என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  நீங்கள் நலமா என கேட்கும் ஸ்டாலின் அவர்களே… உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.

நீங்கள் நலமா என்ற பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் நேரடியாக குறைகளை கேட்டு தெரிந்து கொள்ளும் புதிய திட்டமான நீங்கள் நலமா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்துள்ளார். இந்த திட்டத்தில் மக்களை தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘உங்கள் ஊரில் கலெக்டர்’ , கலைஞர் மகளிர் உரிமை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா.? என தெரிந்து கொண்டு அதில் உள்ள குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் குறித்து விமர்சனம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,

“நீங்கள் நலமா” என்று கேட்கும் திரு. @mkstalin
அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!
சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!
எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!
#நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் !
என தெரிவித்துள்ளார்.