சென்னை: சென்னை கிண்டியில் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள  முதியோருக்கான சிறப்பு  மருத்துவமனையை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  முன்னிலையில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை கிண்டியில்  கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார். அதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி மருத்துவ மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மையத்தை (National Centre for Aging), குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மூத்த குடிமக்களின் நலனுக்காக, இந்தியாவில் தில்லி எய்ம்ஸ்சுக்கு அடுத்தப்படியாக திறக்கப்படும் இரண்டாவது சிறப்பு மருத்துவமனை இதுவாகும். சென்னையில் 2019-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை, முதியோர் நல மையமாக செயல்படவிருக்கிறது

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை கிங்ஸ் நிறுவன வளாகம் ஆகிய இரண்டிலும் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்திற்கான விதையை 17 ஆண்டுகளுக்கு முன் விதைத்ததும், அவற்றுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய நான் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில்  பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஜூன் மாதத்தில் 430 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்தார். தற்போது அதே மருத்துவமனையில் முதியோர் நல மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கலைஞர் ஆட்சியில் இருந்த போது முதியோர் நல மருத்துவ மையம் அறிவிக்கப்பட்டது, முதியோர் மருத்துவமனை என்றால் பெரிய அளவில் இடம் வேண்டும் என்று இங்கு கிண்டியில் அமைக்கப்பட்டது.

இந்த கட்டிட பணி 2019 முடிவுற்று, கொரோனா பேரிடர் காலத்தில் சிகிச்சை அளிக்க இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர் அழுத்தம் காரணமாக ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து, இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குளிர்சாதன வசதி, மேசை, நாற்காலி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் கொண்ட அறைக்கள் உள்ளன. இதில் 76 கட்டண அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை ஒரு பின் தாங்கிய பகுதி என்பதால் குறைந்தபட்சம் அறைக்கு 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான மருத்துவமனை இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு தொடங்கி திட்டமிடப்பட்டு பல்வேறு நிலைகளைக் கடந்து இன்றைக்கு பணிகள் நிறைவுற்று முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்திருக்கிறார்.

பிரத்தியாக நோய்களுக்கான அறிவுத்திறன் குறைபாடு மற்றும் நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல், நாள்பட்ட வலி உள்ளிட்ட வகைகளுக்கு கண்டறியும் சிகிச்சைக்கான சிறப்புக் குறியீடுகளும் 24 மணி நேரமும் இங்கே இயங்குகிறது. கண் காது மூக்கு அறுவை சிகிச்சை தொண்டைகள் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் போன்ற முக்கிய சேவைகளும் இந்த மையத்தில் முதியவர்களுக்கு அளிக்க இருக்கிறது இங்கே அதிநவீன வசதிகளும் இந்த மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை பல்வேறு புதிய வசதிகளுடன் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது 200 படுக்கை வசதிகள் உள்ளது.

200படுக்கைகள் மட்டுமல்லாமல் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள், 20 கட்டணப்படுக்கைகள் என்கின்ற வகையில் கட்டண அறைகளும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணப் படுக்கைகள் பொறுத்தவரை ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன அறை, தொலைக்காட்சிப் பெட்டி, ஷோபா, மேசை மற்றும் நாற்காலி, பீரோ போன்ற வசதிகளுடன் ஒவ்வொரு அறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதியோரைப் பொறுத்தவரை மருத்துவத்திற்கு வருபவர்கள் பார்வை திறன் குறைபாடு, ஞாபக சக்தி போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கான வருபவர்கள் 24 மணிநேரமும் படுக்கை அறைகளில் தங்குவது அவசியமற்ற ஒன்று என்பதாலே அவர்கள் மாலை நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் வசதியாக நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. நூலகம் மட்டுமல்லாமல் அவர்கள் ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில் கேரம் போர்டு, செஸ் பலகைகள், பல்லாங்குழி போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் தொடர்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது என கூறினார்.