சென்னை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாகத் தமிழகம் வந்தார். அவர் முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட பின், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன் – பெள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார். பின்பு மசினகுடியிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் மைசூரு புறப்பட்டுச் சென்றார்.

மைசூருவிலிருந்து விமானம் மூலம் இரவு 7 மணிக்குச் சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்று  காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள மைதானத்தில், குடியரசுத் தலைவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

பின்னர், அங்கிருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவர் சென்று அங்கு நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.