டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் உள்பட தலைவர்கள் மரியாதை செய்தனர்.

முன்னாள் பிரதமரான வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் மரணமடைந்தார். அவரது  4வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். பாஜகவை சேர்ந்த வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.  இந்j நிலையில், அடல் பிஹாரி வாஜ்பாயின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஜேபி நட்டா உள்பட பல தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.