கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு கிரமங்களிலிருந்தும் நாள் தோறும் 400-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். முறையான சிகிச்சையும் கிடைப்பதால் நோயாளிகள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் 2 பெண் பொது மருத்துவர்கள் உட்பட 7 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் 2 அல்லது 3 பேர் விடுமுறையில் சென்று விடுகின்றனர். கடந்த ஒரு வருடமாக மகப்பேறு மருத்துவர் இங்கு பணிபுரிந்து வந்தார். இதனால் கர்ப்பிணி பெண்கள் முறையான சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் மகப்பேறு மருத்துவரை சில தினங்களுக்கு முன் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து விட்டதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே நிரந்தர மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்