னிப் பெயர்ச்சி 2017 : ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை 7ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  இது மிகவும் கடினமான காலம் ஆதலால் யாரையும் நம்பாமல், முன்னேச்சரிக்கையுடன் இருக்கவும்.  உங்களை ஏமாற்றவும் குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கவும் முயல்பவர்களிடம் கவனமாக இருக்கவும்.

முக்கிய பத்திரங்கள் எதிலும் சட்ட நிபுணரை ஆலோசிக்காமல் கையெழுத்திட வேண்டாம்.  பூர்வீக சொத்துப் பங்கு கிடைக்க போராட்டம், செலவுகள் அதிகரிப்பு, சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் வில்லங்கம் ஆகியவை நேரிடலாம்.  திடீர் பயணங்கள், அலைச்சல்கள், சகோதரருடன் மனவருத்தம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சனி பகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் சாதுரியப் பேச்சினால் எதிர்பார்த்த பணவரவுக்கு குறை இருக்காது.  உத்தியோகப் பொறுப்பு அதிகரிப்பு, வேற்று மொழியினரால் ஆதாயம் ஆகியவை உண்டாகும்.   வியாபாரிகளுக்கு போட்டி அதிகரிப்பதால் மிகவும் சுமாராகவே இருக்கும்.  பழைய சரக்குகளை விற்க கடும் போராட்டம் செய்ய வேண்டி வரும்.  பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும்.  ரசாயன வகை, உதிரி பாகங்கள் ஆகிய வர்த்தகர்களுக்கு லாபம் வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்புக்கு பலன் கிடைக்காது.  அதிகாரிகள் நெருக்கடி, சக ஊழியர்கள் ஒத்துழையாமை ஆகிய வை இருந்த போதும் ஊதிய உயர்வுக்கு வாய்ப்புண்டு

மாணவர்கள் மற்றும் மாணவிகள் அன்றைய பாடத்தை அன்றே படிப்பது நல்லது.  மறதியை தவிர்ப்பது மிக மிக நல்லது.

கலைத்துறையினருக்கு வேற்று மொழியினரால் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் வந்தாலும் வதந்திகளிலும், விமர்சனங்களிலும் கவனம் செலுத்த் வேண்டும்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களை சிறு சிறு பிரச்னைகளில் சிக்க வைக்கும்.  உங்கள் கடின உழைப்பும், சமயோசித புத்தியும் உங்களுக்கு கை கொடுக்கும்.

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் திடீர் பண வரவு, திருமணம், கிரகப் பிரவேசம் நடக்க வாய்ப்பு உண்டு.  புதிய வேலைவாய்ப்பு,  புது வாகன யோகம், அயல்நாடு பயணம் ஆகியவை நடக்கும்.  ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடும் அலைச்சல் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறுதல், குடும்ப அமைதி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பணவரவு திருப்தி தரும்.  மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு சிறு விபத்து, வீண் டென்ஷன், மன உளைச்சல் உண்டாகும்.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில் வீடு மனை வாங்குதல், புண்ணிய தல யாத்திரைகள் நிகழும். ரோகிணி, மிருகசீரிடம் 1 மற்றும் 2ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.  கார்த்திகை 2, 3. 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல், உடல் நலக் குறைவு ஏற்படும்

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் தடைப்பட்ட வேலைகள் முடியவும், கணவன் மனைவி உறவில் மகிழ்வும் உண்டாகும்.  வழக்குகள் சாதகம், கடன் பிரச்னை தீர்வு ஆகியவையும் ஏற்படும்

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் உடல் உபாதைகள் தொல்லை தரும்.  குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போக வேண்டும்.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் சகோதரர்களுடனும் தாயாருடனும் கருத்து மோதல்கள் அதிகமாகும்.  கூடிய வரை அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.

பரிகாரம் : பிரதோஷத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஸ்ரீ நாமபுரிஸ்வரரையும் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்பாளையும் இளநீர் சமர்ப்பித்து  வழிபட்டு  வர வேண்டும்