“தலித் மக்கள் இந்து கோயில்களுக்கு போவதை நிறுத்த வேண்டும்” என்று அம்பேத்கரின் பேரனான  பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், “அதிகாரத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். யார் உங்கள் எதிரி? விஜயதசமியிலும் தசராவிலும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் பூஜைகளில் ஆயுதங்களை வைத்து பூஜிக்கிறீர்கள். அது போன்ற வழிபாடுகள் மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும் தங்களுடைய ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்வகையில் ஏற்பட்ட பழக்கம்.
prakash-ambetkar
ஆனால், இப்போது நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம். யாரும் நம்மை ஆட்சி செய்யவில்லை. நாம்தாம் நம்மை ஆள்கிறோம். பிறகு, ஏன் இந்த ஒடுக்கும் மனநிலைக்கான தேவை? நமக்கு அமைதியும் முன்னேற்றமும் சகோதரத்துவமுமே தேவை” என்றவர்,
“பாகிஸ்தானிலிருந்து வரும் சில சக்திகள்,  இங்கே குண்டு வெடிப்புகளை நிகழ்த்திவிட்டு திரும்பிச் சென்றுவிடுகின்றன. ஆனால், ஆர் எஸ் எஸ், விஷ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், கவ் ரக்‌ஷக் தள் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் சென்று குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக எவரேனும் கேள்விப்பட்டதுண்டா? அங்கே போய் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு திரும்பியிருந்தால், இவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் என புரிந்துகொள்ளலாம். உண்மையில் பாகிஸ்தானைப் பார்த்துதான் இவர்கள் பயந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.  இயக்கம் காட்சிக்கு வைக்கும் ஆயுதங்கள் முன்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும்  தற்போது தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதையே உணர்த்துகின்றன” என்றார்.
மேலும் அவர், “தலித் மக்கள் இந்து கோயில்களுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.