டெல்லி: பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக. பொதுஇடங்கள்,  டிராபிக் சிக்னல்களிலும், சந்தைகள், கோவில்கள் உள்பட பொது இடங்களில், பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும், பிச்சைக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தமனு மீதான விசாரணை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம்ஆர்.ஷா அமர்வில் இன்று நடைபெற்றது. பிச்சைக்காரர்கள் விவகாரத்தில், வசதிபடைத்தவர்களின் கண்ணோட்டத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்று கூறியது. மேலும், வறுமை தான் பிச்சை எடுக்க காரணம் என்று கூறிய நீதிபதிகள்,  அது ஒரு சமூக-பொருளாதார பிரச்சனை என்றும் கருத்துதெரிவித்த நீதிபதிகள், “வறுமைக்காக இல்லாவிட்டால் யாரும் பிச்சை எடுக்க விரும்ப மாட்டார்கள் என்று கூறியதுடன், அவர்கள் பிச்சை எடுக்க அனுமதிக்க கூடாது என்று நாங்கள் கூற முடியாது என்று கூறியதுடன், அதை மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனா பரவலின் பின்னணியில், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கைக்கு  பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.