கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இன்று இரவு நடைபெறற இருந்த, இலங்கையுடனான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதைத்தொடர்ந்த, இன்று  2-வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) தொடங்க இருந்தது.

இதற்கிடையில், உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட இந்தியவீரர் குருனால் பாண்ட்யாவுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, இன்றைய போட்டி, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா அணி சார்பில்  பிரித்வி ஷா, தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன்,  தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரர்களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.