சென்னை: பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இன்று திருவண்ணாமலைக்கு 585 சிறப்பு  பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி, பவுர்ணமி தினமான (புதன்கிழமை) சென்னையில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 330 பஸ்களும்,  பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

இதுமட்டுமின்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை, குளிர் சாதன வசதி கொண்ட 30 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்படும்.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசுப் பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, வார இறுதி நாள்கள், பெளா்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேட்டிலிருந்து மே 24 முதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலம் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவா்கள் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவா்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்கும்படி கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையின் படி மே 23 முதல் திருவண்ணாமலைக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருந்தது. அவற்றில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு மே 24 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாள்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமியை முன்னிட்டும் தேவைக்கேற்ப சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டுவரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும், ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை தகவல்