சென்னை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக பக்தர்களின் வசதிக்காக  3 சிறப்பு ரயில்களை இயக்குவதாக  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுபோல திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், பவுர்ணமி மற்றும் உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி,  சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர் அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடைகிறது.

மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி காலை 9:15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 9:15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு திருவண்ணாமலையை 10:45 மணிக்கு வந்து அடையும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.