ஷிம்லா: தற்போது கொரோனா ஊரடங்கால், இந்தியப் பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள ஆன்லைன் வகுப்பு நடைமுறையால், இமாச்சல் மாநிலத்தின் ஏழை மனிதர் ஒருவர், தனது பசுவை விற்று, தனது குழந்தைகளுக்காக ஸ்மார்ட்ஃபோன் வாங்கியுள்ளார்.
தனக்கு வருமானம் தரக்கூடிய ஒரே ஆதாரமான தனது பசுவை ரூ.6000க்கு விற்று, 4ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் தனது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக இவர் ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.
இவர், ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதற்கானப் பணத்தை, வங்கிகளிடம் கடனமாகக் கேட்டுள்ளார் மற்றும் வட்டிக்கு விடும் நபர்களின் உதவியையும் நாடியுள்ளார். ஆனால், இவரின் உண்மை நிலையை அறிந்த அவர்கள் இவருக்கு எந்தவித பதிலையும் அளிக்கவில்லை.
தனது பிள்ளைகளின் பள்ளியை இவர் அணுகியபோதும், அவர்கள் ஃபோன் கட்டாயம் வேண்டுமென கூறிவிட்டனர். இந்நிலையில், தனது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்த குல்திப் குமார் என்ற அந்த ஏழை தந்தை, தன் குடும்பத்தின் வருவாய் ஆதாரமாக இருந்த ஒரே பசுவை, ரூ.6000க்கு விற்று ஸ்மார்ட்ஃபோன் வாங்கியுள்ளார்.
ஆனால், தற்போது இந்த விஷயம் வெளியில் பரவியுள்ளதால், பலதரப்பிலிருந்தும் அவருக்கான உதவிகள் தேடி வருகிறது.
ஆன்லைன் வகுப்பு நடைமுறை, கிராமப்புற மாணாக்கர்களை கடுமையாக பாதிக்கும் என்று மக்கள் நலன் சார்ந்த சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பியும்கூட, அரசுகளும், கல்வித் துறைகளும் அதைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை.