கோவை:

பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம் என்று,  சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த  சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர் இன்று கோவை வந்தார்.

சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர்

கோவை காவலர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.

மேலும்,  பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கு சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமை யில் விசாரிக்கப்படும் என்றவர், அவருக்கு உதவியாக கோவை டி.எஸ்.பி. முத்துசாமி, கோவை ஆய்வாளர் சுமதி உட்பட,  5 ஆய்வாளர்கள்  தலைமையிலான தனிப்படையினரும் விசாரணை துவக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பாலியல் வழக்கு தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றவர், இதுதொடர்பாக  கோவை காவல்துறை கொடுத்த அனைத்து ஆவணங்களை தனியாக குழு அமைத்து விசாரித்து வருவதாகவும், கோவை காவல்துறை கைது செய்தவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  நேர்மையான முறையில் விசாரணை நடத்தி,  சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, வழக்கு சிபிஐயிடம் சென்றால் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். எந்தவித குழப்பமும் இல்லை என்றவர், கைப்பற் றப்பட்டுள்ள  செல்போன் தடவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.

இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி காவல்துறையினர் சரியான முறையில் விசாரணை நடத்த வில்லையே என்ற கேள்விக்கு,  விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதால் தான் ஐ.ஜி. மட்டத்தில் உள்ள நான் வந்துள்ளேன். பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக இருக்கும்.

இவ்வாறு ஐ.ஜி.ஸ்ரீதர் கூறினார்.