சென்னை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக  தன்மீதும், தனது மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பபட்டு உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த கொடூர செயலை அரங்கேற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், வழக்கு தொடர்பாக ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் மீதும் அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சசி  வழக்கை தமிழக அரசு  சிபிசிபிஐக்கு மாற்றிய நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியிலை வெளியிட்ட ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,  பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் குற்றாளிகளை தப்பிவிடாமல் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்,

பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சியே குற்றவாளிகளுக்கு துணை நிற்பதால் அதன் பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்கும். தற்போது நடைபெற்று வரும் மாணவர்கள்  போராட்டத்தை திசை திருப்பவே என் மருமகன் சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்மீது மட்டுமல்ல இந்த விவகாரத்தை தூண்டி விடுகிறேன் என என்மீதும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நான் சட்டரீதியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தை நாங்கள் நாடப்போகிறோம் என்றார்.

திமுக தலைமையிலான   கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், ஒன்றாக இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்தக் தோழமை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தாலும், தற்போது இது மக்களவைத் தேர்தலுக்காக ஒரு பலமான கூட்டணியாக உருவெடுத்துள்ளோம். இது பேரத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல.

நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வேட்பாளர்களை பொறுத்தவரையில் அந்தந்த கட்சியினர் அறிவிப்பார்கள். திமுக தனியாக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை முறையாக தயாராகியுள்ளது. அது இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெளியாகும். மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்போது, இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிடும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார். அப்போது, அவருடன்  திமுகப் பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்பட கூட்டணி கட்சியினர் இருந்தனர்.