சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அரசியல் கட்சிகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற வரும் 22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. முன்னதாக  கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணை நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மாநில தேர்தல்  தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.  தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,400 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்துவதா? என்பது குறித்த விவாதத்தின்போது,  ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த ஆய்வு செய்து வரும் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை யானைகவுனி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தமிழக அரசு தேர்தலை நடத்த தயார், தேர்தல் ஆணையத்துக்கு தேதியெல்லாம் கொடுத்துவிட்டோம். இனி தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் தெரிவிக்க வேண்டும். அரசு தரப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.